யு-17 உலகக் கோப்பை கால்பந்து : முதல் ஆட்டத்தில் இந்தியா தோல்வி

17 வயதுக்குள்பட்டோருக்கான (யு-17) உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 0-3 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவிடம் தோல்வி கண்டது.
யு-17 உலகக் கோப்பை கால்பந்து : முதல் ஆட்டத்தில் இந்தியா தோல்வி

17 வயதுக்குள்பட்டோருக்கான (யு-17) உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 0-3 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவிடம் தோல்வி கண்டது.

17 வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி தில்லியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. அதை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 

தில்லியில் மாலை 5 மணிக்குத் தொடங்கிய முதல் ஆட்டத்தில் (குரூப் ஏ) கானா அணி 1-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவைத் தோற்கடித்தது. 
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 39-ஆவது நிமிடத்தில் கானாவின்

இப்ராஹிம் கோலடித்தார். இதையடுத்து ஸ்கோரை சமன் செய்ய கடுமையாகப் போராடியது கொலம்பியா. ஆனால் அதற்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. இதனால் கானா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

நவி மும்பையில் மாலை 5 மணிக்கு நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் (குரூப் பி) நியூஸிலாந்தும், துருக்கியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 18-ஆவது நிமிடத்தில் துருக்கி வீரர் அஹமது கோலடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் துருக்கி அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. 

பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தின் 58-ஆவது நிமிடத்தில் நியூஸிலாந்து வீரர் மட்டா கோலடிக்க, ஸ்கோர் சமநிலையை (1-1) எட்டியது. இதன்பிறகு கோல் எதுவும் விழாத நிலையில் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

இந்தியா தோல்வி: தில்லியில் இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் (ஏ பிரிவு) இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவிடம் தோல்வி கண்டது. இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய அமெரிக்காவுக்கு 30-ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதில் சார்ஜென்ட் கோலடித்தார். 

அதைத் தொடர்ந்து 51-ஆவது நிமிடத்தில் டர்கினும், 84-ஆவது நிமிடத்தில் கார்ல்டானும் கோலடிக்க, அமெரிக்கா 3-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை தோற்கடித்தது. முதல் முறையாக உலகக் கோப்பையில் விளையாடும் இந்திய அணி, முதல் ஆட்டத்திலேயே படுதோல்வி கண்டது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

இந்தியா-அமெரிக்கா ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக மைதானத்துக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, இரு அணி வீரர்களுடன் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார். மேலும் இரு நாட்டு தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டபோது அவர் மைதானத்தில் இருந்தார்.

நவி மும்பையில் இரவு 8 மணிக்கு நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் (குரூப் பி) பராகுவே அணி 3-2 என்ற கோல் கணக்கில் மாலி அணியை வீழ்த்தியது. பராகுவே தரப்பில் கெலீனா (12-ஆவது நிமிடம்), சான்செஸ் (17), ரோட்ரிகஸ் (55) ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர். மாலி தரப்பில் டிரேம் (20), டியே (34) ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர். 

இன்றைய ஆட்டங்கள்
ஜெர்மனி-கோஸ்டா ரிகா, இடம்: கோவா, 
நேரம்: மாலை 5
பிரேசில்-ஸ்பெயின், 
இடம்: கொச்சி, 
நேரம்: மாலை 5
ஈரான்-கினியா, 
இடம்: கோவா, 
நேரம்: இரவு 8
வட கொரியா-நைஜர், இடம்: கொச்சி, 
நேரம்: இரவு 8

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com