ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை தோற்கடித்தது.
வங்கதேச தலைநகர் டாக்காவில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அசத்தலாக ஆடியது இந்தியா. 3-ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் எஸ்.வி.சுநீல் கோலடிக்க, அடுத்த நிமிடமே ஜப்பான் கோலடித்தது. இதன்பிறகு இந்தியாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதை ஹர்மான்பிரீத் சிங் கோட்டைவிட்டார்.
22-ஆவது நிமிடத்தில் ஹர்மான்பிரீத் கொடுத்த பாஸில் லலித் உபாத்யாய் கோலடிக்க, இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் பெற்றது. அதைத் தொடர்ந்து 33-ஆவது நிமிடத்தில் சுநீல் கொடுத்த கிராஸில், ரமன்தீப் சிங் கோலடித்தார்.
அதைத் தொடர்ந்து ஹர்மான்பிரீத் 35 மற்றும் 48-ஆவது நிமிடங்களில் கோலடித்தார். இதனால் இந்தியா 5-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. கடைசி நிமிடத்தில் இந்தியாவுக்கு 2 பெனால்டி வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அதை இந்தியா கோட்டைவிட்டது. இறுதியில் இந்தியா 5-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி கண்டது.
இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் வங்கதேசத்தை சந்திக்கிறது. இந்த ஆட்டம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.