இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 3-ஆவது டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டது.
இந்தியா சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் பங்கேற்று விளையாடியது.
இதில் முதலில் நடந்த 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்தியா அசத்தியது. மேலும் ஒருநாள் தரவரிசையிலும் முதலிடம் பிடித்தது.
இதையடுத்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டியில் இந்தியாவும், 2-ஆவது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றிபெற்றன.
இந்நிலையில், தொடரை நிர்ணயிக்கும் 3-ஆவது டி20 போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்தது.
கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் போட்டி நடைபெறும் நாளன்றும் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் ஆடுகளம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து 3-ஆவது போட்டியை ரத்து செய்வதாக நடுவர்கள் அறிவித்தனர்.
எனவே டி20 போட்டித் தொடர் கோப்பை இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.