டெஸ்ட் மற்றும் ஒருநாள் லீக் தொடர்களை நடத்த ஐசிசி ஒப்புதல் அளித்துள்ளது.
ஆக்லாந்தில் இன்று நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:
டெஸ்ட் லீகில் 9 அணிகளும் ஒருநாள் லீக்கில் 13 அணிகளும் விளையாடவுள்ளன.
டெஸ்ட் லீகில் பங்குபெறும் 9 அணிகளும் இரண்டு வருட இடைவெளியில் 6 டெஸ்ட் தொடர்களில் விளையாட வேண்டும். அதில் மூன்று தொடர்கள் உள்ளூரிலும் மூன்று தொடர்கள் வெளிநாட்டிலும் நடத்தப்படவேண்டும். டெஸ்ட் தொடரில் குறைந்தபட்சம் 2 டெஸ்டுகளும் அதிகமாக 5 டெஸ்டுகளும் இடம்பெறவேண்டும். டெஸ்ட் லீக் 2019 முதல் 2021 வரை நடைபெறும்.
மேலும் 2019 வரை நான்கு நாள் டெஸ்ட் போட்டிகளுக்கும் ஐசிசி அனுமதி அளித்துள்ளது.
ஒருநாள் லீகில் 13 அணிகள் இடம்பெற்றுள்ளன. ஒருநாள் லீக் 2020-ல் ஆரம்பிக்கவுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு அணியும் நான்கு உள்ளூர் போட்டிகளிலும் நான்கு வெளிநாட்டு போட்டிகளிலும் பங்கேற்கவேண்டும். ஒவ்வொரு ஒருநாள் தொடரும் மூன்று போட்டிகளைக் கொண்டிருக்கவேண்டும்.
இதுகுறித்து ஐசிசி தலைவர் சஷாங்க் மனோகர் கூறும்போது: இனிமேல் நடைபெறும் ஒவ்வொரு சர்வதேசப் போட்டிகளுக்கும் ஓர் அர்த்தம் இருக்கும். ஒவ்வொரு வெற்றிகளுக்கும் மதிப்பு இருக்கும். இதனால் ரசிகர்களிடையே கிரிக்கெட் போட்டிகள் மீதான ஆர்வம் மேலும் அதிகரிக்கும். ஐசிசியின் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து நாடுகளுக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.