டெல்லி டி20 போட்டியில் நெஹ்ரா விளையாடுவாரா?: தேர்வுக்குழுத் தலைவர் பதில்
வரும் நவம்பர் 1-ம் தேதி தில்லியில் நடைபெறவுள்ள இந்தியா-நியூஸிலாந்து இடையிலான முதல் டி20 ஆட்டத்தோடு ஓய்வு பெறுவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா. இந்நிலையில் இன்று அறிவிக்கப்பட்டுள்ள டி20 தொடருக்கான அணியில் நெஹ்ரா இடம்பெற்றுள்ளார்.
இதையடுத்து டெல்லி டி20 போட்டியில் நெஹ்ரா விளையாடுவாரா என்கிற கேள்வி தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத்திடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்:
டெல்லி டி20 போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணியில் நெஹ்ரா இடம்பிடிப்பார் என்று எங்களால் சொல்ல முடியாது. அவர் விளையாடுவது குறித்து அணி நிர்வாகம் முடிவெடுக்கும். அவர் விளையாடுவது குறித்து எங்கள் பக்கமிருந்து எவ்வித உத்தரவாதம் தரப்படவில்லை. குறிப்பிட்ட நாளன்று இதுகுறித்து முடிவெடுக்கப்படும். டெல்லி போட்டி குறித்து நெஹ்ரா எங்களிடம் எவ்வித கோரிக்கையும் வைக்கவில்லை.
நியூஸிலாந்து தொடர் வரை நெஹ்ராவைப் பரிசீலிப்போம் என்று நெஹ்ராவிடமும் அணி நிர்வாகத்திடமும் தெளிவாகச் சொல்லிவிட்டோம். நியூஸிலாந்து தொடர் முடிவும்வரை காத்திருப்பதற்குப் பதிலாக டெல்லி போட்டியுடன் ஓய்வு பெற அவர் முடிவெடுத்துள்ளார் எனக் கூறியுள்ளார்.