பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் 5-0 என இலங்கை அணியை ஒயிட்-வாஷ் செய்தது.
இத்தொடரின் 5-ஆவது ஒருநாள் போட்டி ஷார்ஜவில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த தொடரில் 4-0 என பாகிஸ்தான் முன்னிலை பெற்றது. இதனால் இப்போட்டியில் ஆறுதல் வெற்றிபெறும் முனைப்பில் இலங்கை அணி களமிறங்கியது.
இதில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் உபுல் தரங்கா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய அந்த அணி ரன் குவிக்கத் திணறியது. இலங்கை பேட்ஸ்மேன் அனைவரும் வந்த வேகத்தில் ஒற்றை இலக்க ரன்களுடன் பெவிலியன் திரும்பினர்.
அதிகபட்சமாக திசிரா பெரைரா 25 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் உஸ்மான் கான் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹஸன் அலி, ஷதாப் கான் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
இதனால் இலங்கை அணி 26.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்களுக்குச் சுருண்டது. இதையடுத்து 104 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தானுக்கு சிறப்பான துவக்கம் அமைந்தது.
துவக்க வீரர் ஃபக்தர் ஸமான் 48 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இமாம்-உல்-ஹக் 45 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதனால் பாகிஸ்தான் அணி 20.2 ஓவர்களிலேயே 1 விக்கெட் மட்டும் இழந்து 105 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.