நியூஸி.க்கு எதிரான டி20 தொடர்: கோலிக்கு ஓய்வு இல்லை; சிராஜ், ஷ்ரேயாஸ் சேர்ப்பு

நியூஸிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூஸிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேவேளையில், புதிய வீரர் முகமது சிராஜ் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-நியூஸிலாந்து இடையேயான 3 ஆட்டங்களைக் கொண்ட டி20 தொடர் வரும் நவம்பர் 1-ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், வீரர்களுக்கு சுழற்சி முறையில் வாய்ப்பு அளிக்கப்படுவதன் அடிப்படையில், கோலிக்கு இந்தத் தொடரில் ஓய்வளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இந்த டி20 தொடர் மட்டுமல்லாமல், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளுக்கும் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால், இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரிலிருந்து கோலிக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் நவம்பர் 16-இல் தொடங்குகிறது.
இதுகுறித்து இந்திய அணியின் தேர்வுக் குழுத் தலைவர் எம்எஸ்கே. பிரசாத் கூறுகையில், "கோலியின் பணிச்சுமையை கண்காணித்து வருகிறோம். அவர் ஐபிஎல் போட்டி முதல் விளையாடி வருகிறார். அவருக்கும் ஓய்வு முக்கியம் என்பதால் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு அதுகுறித்து முடிவு செய்யப்படும். கேப்டனாக இருந்தாலும், சுழற்சி முறையிலான வாய்ப்புகளுக்கு கோலியும் உள்பட்டவராவார்' என்றார்.
இதனிடையே, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்ட முகமது சிராஜ், புதிதாக டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அத்துடன், அனைத்து ரக போட்டிகளிலும் சிறப்பாக செயல்படும் ஷ்ரேயாஸ் ஐயரும் அணியில் இணைந்துள்ளார்.
இந்நிலையில், அணி நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் ஆஷிஷ் நெஹ்ரா நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அவர் விளையாடுவது குறித்து அணி நிர்வாகமே முடிவு செய்யும் என்றும் எம்எஸ்கே.பிரசாத் கூறியுள்ளார்.
டி20 அணி: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவன், ரோஹித் சர்மா (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், மணீஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், எம்.எஸ்.தோனி, ஹார்திக் பாண்டியா, அக்ஸர் படேல், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரீத் பூம்ரா, ஆஷிஷ் நெஹ்ரா, முகமது சிராஜ்.

டெஸ்ட் அணி அறிவிப்பு

இலங்கைக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் 2 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், அபினவ் முகுந்துக்குப் பதிலாக, காயத்திலிருந்து மீண்ட முரளி விஜய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். எதிர்பார்க்கப்பட்டது போலவே, புஜாரா, சாஹா, இஷாந்த் ஆகியோர் அணிக்குத் திரும்பியுள்ளனர்.
முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணி:
விராட் கோலி (கேப்டன்), கே.எல்.ராகுல், முரளி விஜய், ஷிகர் தவன், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே (துணை கேப்டன்), ரோஹித் சர்மா, ரித்திமான் சாஹா, அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், ஹார்திக் பாண்டியா, முகமது சமி, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், இஷாந்த் சர்மா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com