இந்தியா-இலங்கை அணிகள் மோதும் ஒரே டி20 ஆட்டம் கொழும்பில் புதன்கிழமை நடைபெறுகிறது.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 3 ஆட்டங்களைக் கொண்ட டெஸ்ட் தொடரையும், 5 ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் தொடரையும் முழுமையாகக் கைப்பற்றி இலங்கையை அதன் சொந்த மண்ணிலேயே முற்றிலுமாகத் தடுமாறச் செய்துள்ளது. இந்நிலையில், இந்த ஒரே டி20 ஆட்டத்திலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் முனைப்பில் களம் காண்கிறது கோலியின் படை. மறுமுனையில், இந்த ஆட்டத்தின் மூலமாக ஆறுதல் வெற்றியாவது பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இலங்கை அணி.
இதனிடையே, உலகக் கோப்பை போட்டியை கருத்தில் கொண்டு பரிட்சார்த்த மற்றும் சுழற்சி முறையில் வீரர்களை களமிறக்கி வருகிறது இந்திய அணி நிர்வாகம். அதன்படி ரிஷப் பந்த்துக்கு, இந்த டி20 ஆட்டத்தில் வாய்ப்பு இருக்கலாம் எனத் தெரிகிறது.
ரோஹித் சர்மா அவருக்கான இடத்தில் நீடிக்க, கே.எல்.ராகுல், மணீஷ் பாண்டே ஆகியோர் மிடில் ஆர்டரில் தொடர வாய்ப்புள்ளது. கடைசி ஒருநாள் ஆட்டத்தில் அரைசதம் விளாசிய கேதார் ஜாதவ் மீண்டும் ஒருமுறை தனது திறமையை நிரூபிக்க வாய்ப்பு அளிக்கப்படலாம்.
அந்த ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்ட ஹார்திக் பாண்டியா, டி20 ஆட்டத்தில் களம் காண வாய்ப்புள்ளது. பந்துவீச்சைப் பொருத்த வரையில் பூம்ரா தனக்கான இடத்தை உறுதி செய்துள்ள நிலையில், மற்றொரு இடத்துக்கு ஷர்துல் தாக்குர் அல்லது புவனவேஸ்வர் குமாரில் ஒருவர் நியமிக்கப்படுவர். சுழற்பந்துவீச்சைப் பொருத்த வரையில் யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவை கோலி களமிறங்கலாம் எனத் தெரிகிறது.
இதனிடையே, தொடர் தோல்வியை சந்தித்துள்ள இலங்கை, தனது டி20 அணியில் சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. சுழற்பந்துவீச்சாளர் ஜெஃப்ரே வான்டர்சே, ஆல்ரவுண்டர் டாசன் சனகா புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். காயம் காரணமாக ஓய்வில் இருந்த சுரங்கா லக்மல் அணிக்கு திரும்ப, சுழற்பந்துவீச்சாளர் சண்டகன், விஷ்வா, சமீரா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.