2006 முதல் 2007 உலகக் கோப்பை வரையில் இந்திய கிரிக்கெட்டுக்கு மோசமான காலகட்டம் என்று முன்னாள் இந்திய கேப்டனான சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.
2007 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் ராகுல் திராவிட் தலைமையில் பங்கேற்ற இந்திய அணி, முதல் சுற்றோடு வெளியேறியது. அது, உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியின் மோசமான செயல்பாடாக அமைந்தது.
இந்த நிலையில் அது தொடர்பாக சச்சின் மேலும் கூறியதாவது: 2006 முதல் 2007 உலகக் கோப்பை வரையில் இந்திய கிரிக்கெட்டுக்கு மோசமான காலகட்டம். 2007-இல் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் 'சூப்பர்-8' சுற்றுக்கு நாங்கள் தகுதி பெறவில்லை. எனினும் பின்னர் அதிலிருந்து மீண்ட இந்திய அணி புதிய சிந்தனைகளோடு, புதிய வழியில் பயணிக்க ஆரம்பித்தது. ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டன. ஓர் அணியாக இணைந்து சாதிக்க வேண்டும் என நாங்கள் திட்டமிட்டோம். அதற்கேற்ப அர்ப்பணிப்பு உணர்வோடு விளையாடினோம். அதன் காரணமாக வெற்றி எங்கள் வசமானது.
இந்திய அணியில் மாற்றங்கள் நிகழ்ந்தபோது, அது சரியா, தவறா என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் அதற்கான பலன் ஒரே இரவில் கிடைத்துவிடவில்லை. வெற்றிக்காக நாங்கள் காத்திருந்தோம். அற்புதமான உலகக் கோப்பையை நான் கையில் ஏந்தி வலம் வருவதற்கு 22 ஆண்டுகள் ஆனது என்றார்.
1989-இல் இந்திய அணிக்காக ஆட ஆரம்பித்தார் சச்சின் டெண்டுல்கர். ஆனால் 2011-இல் தான் அவருடைய உலகக் கோப்பை கனவு நனவானது.