கொரியா ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
தென் கொரிய தலைநகர் சியோலில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் பி.வி.சிந்து 21-10, 17-21, 21-16 என்ற செட் கணக்கில் சீனாவின் பிங் ஜியாவைத் தோற்கடித்தார். இந்த ஆட்டம் 66 நிமிடங்கள் நீடித்தது.
சிந்து இந்த வருடம் இரண்டாவது முறையாக சூப்பர் சீரிஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார். மொத்தமாக 5 முறை சூப்பர் சீரிஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் சமீபத்தில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சிந்து ஜப்பானின் நஜோமி ஒகுஹராவிடம் தோல்வி கண்டார். உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு சிந்து முன்னேறியது இது முதல் முறையாகும். இதில் அவர் தங்கம் வென்றிருந்தால், உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றிருப்பார்.
இந்நிலையில் கொரியா ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் இறுதிச்சுற்றில் நஜோமி ஒகுஹரா எதிர்கொள்கிறார் சிந்து. இந்தமுறை தக்க பதிலடி கொடுப்பாரா?