ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவின் பெயரை நாட்டின் 3-ஆவது உயரிய விருதான பத்ம பூஷண் விருதுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியரான சிந்து, தற்போது உலகின் அசைக்க முடியாத வீராங்கனையாக உருவெடுத்துள்ளார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஒரு வெள்ளி மற்றும் இரு வெண்கலப் பதக்கங்கள் வென்றுள்ளார்.
கடந்த ஓர் ஆண்டில் மட்டும் சீன ஓபன், இந்திய ஓபன், கொரிய ஓபன் ஆகிய சூப்பர் சீரிஸ் போட்டிகளில் சிந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மக்காவ் ஓபனில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் சிந்து, தற்போது தரவரிசையில் 2-ஆவது இடத்தில் உள்ளார். சிந்துவுக்கு 2015-இல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சிந்து மகிழ்ச்சி: பத்ம பூஷண் விருதுக்கு தனது பெயர் பரிந்துரைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக சிந்து தெரிவித்துள்ளார். விருதுக்கு தனது பெயரை பரிந்துரைத்ததற்காக மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு நன்றி தெரிவிப்பதாக சிந்து கூறியுள்ளார்.
சிந்துவின் தந்தை பி.வி.ரமணன் கூறுகையில், 'இந்த நேரத்தில் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். விருது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கிறோம்' என்றார்.