சென்னை: தகுந்த பாதுகாப்பு அளிக்க இயலாது என்று சென்னை காவல்துறை தெரிவித்து உள்ளதை அடுத்து, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகள் புணே நோக்கி நகரும் என்று தெரிய வருகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஒரு வாரத்துக்கும் மேலாக அரசியல் கட்சிகள், தமிழ் இயக்கங்கள், விவசாய சங்கங்கள், திரைப்படத்துறையினர் சார்பில் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செவ்வாயன்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு முன்பும் கடுமையான ஆர்பாட்டங்கள் நடைபெற்று பலர் கைது செய்யப்பட்டனர்.
இதன் காரணமாக சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் ஆட்டங்களை இடமாற்றம் செய்ய பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. இத்தகவலை ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லாவும் உறுதி செய்திருந்தார். வீரர்களின் பாதுகாப்பை முன்னிட்டு சென்னையிலிருந்து வேறு இடத்துக்கு மீதமுள்ள ஆறு ஆட்டங்களை இடமாற்றம் செய்ய ஆலோசித்து வருவதாக அவர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தகுந்த பாதுகாப்பு அளிக்க இயலாது என்று சென்னை காவல்துறை தெரிவித்து உள்ளதை அடுத்து, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகள் புணே நோக்கி நகரும் என்று தெரிய வருகிறது.
இது தொடர்பாக ராஜிவ் சுக்லா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
தமிழக காவல்துறை முழு பாதுகாப்பு அளிப்போம் என உத்தரவாதம் அளித்ததனால் நாங்கள் திட்டமிட்டப்படி சென்னையில் அனைத்து போட்டிகளையும் நடத்த முயற்சி செய்தோம். ஆனால் இன்று சென்னை காவல்துறை அவர்களால் பாதுகாப்பு அளிக்க முடியாது என சென்னை அணியிடம் தெரிவித்து விட்டது. எனவே விளையாட்டுப்போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு வருகிறது. எங்களுடைய தேர்வில் புனே மைதானமும் உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.