சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் (ஐசிசி) பொதுக்கூட்டம் இந்தியாவின் கொல்கத்தா மாநிலத்தில் ஏப்ரல் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அனைத்து நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் கலந்துகொள்ளும் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் இந்தியா வரவுள்ளது.
இதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நாஜாம் சேதி மற்றும் தலைமை நிர்வாக இயக்குநர் ஷுபன் அஹ்மத் ஆகியோர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.
இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே சமீபகாலமாக ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு மத்தியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர்களுக்கு இந்திய விசா எவ்வித சிரமமும் இன்றி கிடைக்க ஐசிசி தலையிட்டு ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிலையில், சுமார் 3 வருட இடைவேளைக்குப் பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் இந்தியா வரவுள்ளனர். முன்னதாக, இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரிய (பிசிசிஐ) நிர்வாகிகளை சந்திக்க அப்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷஹாரியார் கான் கடந்த 2015-ஆம் ஆண்டு மும்பை வந்தார்.
ஆனால், மஹாராஷ்டிராவில் உள்ள அரசியல் கட்சியான சிவசேனா, மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமையகத்தில் நுழைந்து போராட்டம் நடத்தியதால், அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.