கிரேக் சேப்பல் எழுதிய மின்னஞ்சலை முதலில் கங்குலியிடம் தெரிவித்தது நான் தான்: மனம் திறந்தார் விரேந்திர சேவாக்

கிரேக் சேப்பல் பிசிசிஐ-க்கு மின்னஞ்சல் எழுதிக் கொண்டிருந்தார். அதை பார்த்த நான் களத்தில் இருந்த கங்குலியிடம் முதலில் தெரிவித்தேன் என்று விரேந்திர சேவாக் மனம் திறந்துள்ளார்.
கிரேக் சேப்பல் எழுதிய மின்னஞ்சலை முதலில் கங்குலியிடம் தெரிவித்தது நான் தான்: மனம் திறந்தார் விரேந்திர சேவாக்

பிரபல பத்திரிகையாளர் போரியா மஜூம்தார் எழுதிய 'லெவன் காட்ஸ் அன்ட் ஏ பில்லியன் ட்ரீம்ஸ்' என்ற நூலின் வங்காளப்பதிப்பு வெளியீட்டு விழா கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அந்த புத்தகத்தை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் வெளியிட்டார்.

அப்போது போரியா மஜூம்தார் உடனான கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. அதில் விரேந்திர சேவாக் பேசியதாவது:

கடந்த 2002-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற தொடரின் போது இந்திய அணியின் துவக்க வீரராக என்னை களமிறங்குமாறு கேப்டன் சௌரவ் கங்குலி மற்றும் பயிற்சியாளர் ஜான் ரைட் ஆகியோர் தெரிவித்தனர். ஒருநாள் தொடர்களில் துவக்க வீரராக களமிறங்கிய அனுபவம் எனக்கு உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

உடனே அதை மறுத்த நான், கடந்த 10 ஆண்டுகளாக துவக்க வீரராக சச்சின் விளையாடியுள்ளார். மேலும் நீங்கள் கூட (கங்குலி) 1998-ல் துவக்க வீரராக தான் இந்திய அணியில் அறிமுகமானீர்கள், நான் எதற்கு துவக்க வீரராக களமிறங்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினேன். 

ஆனால், டெஸ்ட் கிரிக்கெட் விளையாட ஆசை இருந்தால் மேற்கொண்டு எந்த கேள்வியும் கேட்காமல் களமிறங்க வேண்டும். ஏனெனில் அப்போது அந்த இடம் மட்டுமே காலியாக இருந்ததாகவும் அவர்கள் பதிலளித்தனர். இல்லையெனில் பெஞ்சில் தான் உட்கார வேண்டும் என்றார்கள். 

அப்போது நான், துவக்க வீரராக 4 ஆட்டங்கள் களமிறங்குவேன் அதில் என்னால் விளையாட முடியவில்லை என்றால், நான் மீண்டும் நடுவரிசையில் களமிறங்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று கங்குலி மற்றும் ஜான் ரைட் ஆகியோரிடம் சத்தியம் பெற்றுக்கொண்டேன். நான் துவக்க வீரராக களமிறங்கிய பிறகு நடந்தது உலகறியும். 

2005-ஆம் ஆண்டு ஜிம்பாப்வேயில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போதுதான் அந்த சம்பவம் நடைபெற்றது. போதுவாகவே நான் ஃபீல்டிங் செய்யும் போது அவ்வப்போது சிறிய ஓய்வு எடுத்துக்கொள்வேன். அவ்வகையில் அந்த டெஸ்ட் போட்டியின் போது கள நடுவரிடம் எனக்கு வயிற்று உபாதை ஏற்பட்டதாக கூறி 5 ஓவர்களுக்கு ஓய்வு வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதற்கு நடுவரும் சம்மதித்தார். 

பின்னர் ஓய்வு அறைக்கு சென்று அமர்ந்தபோது எனது அருகில் அப்போதைய இந்திய அணி தலைமைப் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் இருந்தார். அவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பிசிசிஐ) மின்னஞ்சல் எழுதிக்கொண்டிருந்தார். நான் களத்துக்கு திரும்பியதும் முதலில் அதை கங்குலியிடம் தெரிவித்தேன் என்றார்.

முன்னதாக, கிரேக் சேப்பல் பிசிசிஐ-க்கு எழுதிய மின்னஞ்சல் கசிந்ததில், கங்குலிக்கும் சேப்பலுக்கும் இடையிலான விரிசல் வெளிப்பட்டது. அதில், கங்குலி இந்திய அணியை வழிநடத்திச் செல்ல உடலளவிலும், மனதளவிலும் தகுதியற்றவராக உள்ளதாக சேப்பல் கடுமயைாக விமரிசித்திருந்தார். மேலும், இந்திய அணியினரின் நம்பிக்கையையும் கங்குலி இழந்துவிட்டதாக குற்றம்சாட்டியிருந்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com