பதினாறு வயதுக்கு உள்பட்டவர்களுக்காக நடைபெறவுள்ள "புரோ ஸ்டார் லீக்' போட்டிக்கான அணிகள் தேர்வு தேசிய அளவில் சனிக்கிழமை தொடங்கியது. இந்த முகாம், மும்பை, ஹைதராபாத், தில்லி, கொல்கத்தா நகரங்களில் நடைபெறுகிறது.
பள்ளி விளையாட்டுகளுக்கான இந்திய சம்மேளனத்தின் ஆதரவுடனும், விவிஎஸ் லஷ்மணின் விளையாட்டு அகாதெமி, செளரவ் கங்குலியின் அறக்கட்டளை, யுவராஜ் சிங்கின் விளையாட்டு மையம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடனும் இந்த முகாம் நடைபெறுகிறது. இதில், ஜாஹீர் கானும் இணைந்துள்ளார்.
இதன் கீழ், வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என 4 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு மொத்தமாக 26 அணிகள் தேர்வு செய்யப்படும். அவை பங்கேற்கும் போட்டிகள் மும்பை, ஜெய்பூர், புணே, ஆமதாபாத், சண்டீகர், தில்லி, சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, பெங்களூரு ஆகிய 10 நகரங்களில் நடைபெறும்.
அதன் மூலமாக 8 அணிகள் தேர்வு செய்யப்பட்டு, புரோ ஸ்டார் லீக் பட்டத்துக்காக அவை மோதும். இந்த முகாமில் சிறப்பாகச் செயல்படும் அணி, 2018-ஆம் ஆண்டு உலக பள்ளிகள் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதிபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.