ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் லெக் ஸ்பின்னர்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் கூறினார்.
இதுதொடர்பாக மும்பையில் அவர் சனிக்கிழமை கூறியதாவது:
ஒவ்வொரு பந்துவீச்சாளரும் ஆடுகளத்துக்கு ஏற்றவாறு வித்தியாசமாக பந்துவீசுகின்றனர். ஆனால், ஐபிஎல் போட்டியில் பெரும்பாலும் வெற்றிகரமான பந்துவீச்சாளர்களாகத் திகழ்வது லெக் ஸ்பின்னர்கள் தான். ஒவ்வொரு அணியிலும் ஒரு லெக் ஸ்பின்னர் உள்ளனர்.
அஸ்வின் போன்ற வெற்றிகரமான ஆஃப் ஸ்பின்னர்கள் கூட, லெக் ஸ்பின் பந்துவீச முயற்சிக்கின்றனர். இதன்மூலமாக லெக் ஸ்பின்னர்களின் முக்கியத்துவம் தெரியவருகிறது. அவர்கள் வெற்றிகரமாக இருப்பதற்கு சரியாகக் காரணம் கூற இயலவில்லை. ஆனால், அவர்கள் நிச்சயம் விக்கெட் எடுக்கின்றனர். அவர்களைக் கணிப்பது அவ்வளவு எளிதல்ல. சமீபத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜனுக்கு பதிலாக, லெக் ஸ்பின்னர் கரன் சர்மா களமிறக்கப்பட்டார். அந்த ஆட்டத்தில் சென்னை 2 லெக் ஸ்பின்னர்களுடன் ஆடியது. ஒவ்வொரு அணியுமே கூடுதலாக ஒரு லெக் ஸ்பின்னர் வைத்துள்ளது. இந்த சீசனின் முதல் ஆட்டத்தில் மும்பை வீரர் மார்கன்டே சிறப்பாகச் செயல்பட்டார். லெக் ஸ்பின்னர் சிறப்பாகச் செயல்படும் பட்சத்தில் அது அணிக்கு கூடுதல் பலமாக அமையும் என்று கபில் தேவ் கூறினார்.