ஸ்டோக்ஸ் குற்றமற்றவர்: நீதிமன்றம் தீர்ப்பு!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரிஸ்டல் இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தகராறில் இருவருடன் பென் ஸ்டோக்ஸ் தகராறில் ஈடுபட்டு...
ஸ்டோக்ஸ் குற்றமற்றவர்: நீதிமன்றம் தீர்ப்பு!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரிஸ்டல் இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தகராறில் இருவருடன் பென் ஸ்டோக்ஸ் தகராறில் ஈடுபட்டு தாக்கிக் கொண்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது அவரது துணை கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டது. 

இங்கிலாந்து-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் பிரிஸ்டலில் கடந்த செப்டம்பர் மாத இறுதியில் நடைபெற்றது. அதில் இங்கிலாந்து 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்பிறகு அங்குள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் அதிகாலையில் வெற்றியைக் கொண்டாடியபோது, பென் ஸ்டோக்ஸுக்கும், அங்கு வந்த 27 வயது இளைஞருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து பென் ஸ்டோக்ஸ் அவரைத் தாக்கியுள்ளார். அதில் முகத்தில் பலத்த காயமடைந்த அந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், பென் ஸ்டோக்ஸைக் கைது செய்தார்கள். எனினும் வழக்கு எதுவும் பதிவு செய்யாமல், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையோடு பென் ஸ்டோக்ஸ் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து இங்கிலாந்தின் ஆஷஸ் அணியிலிருந்து ஸ்டோக்ஸ் நீக்கப்பட்டார். தெருச்சண்டையில் ஈடுபட்டு அமைதியைக் குலைத்ததாக பென் ஸ்டோக்ஸ், அவருடைய நண்பர் ரையான் அலி ஆகியோர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. 

இதற்கிடையே தற்போது தொடங்கியுள்ள இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்டில் ஸ்டோக்ஸ் அபாரமாகப் பந்துவீசி இங்கிலாந்தின் வெற்றிக்கு வித்திட்டார். எனினும் வழக்கு விசாரணை காரணமாக ஸ்டோக்ஸ் 2-வது டெஸ்டில் இடம்பெறவில்லை.

பிரிஸ்டல் நகர நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் ஸ்டோக்ஸ் ஆஜராகி வந்தார். அவருடன் அப்போது தகராறில் ஈடுபட்ட ரேயான் அலி, ரேயான் ஹாலேயும் ஆஜரானார்கள். இந்த விசாரணையை முன்வைத்து மூன்றாவது டெஸ்டுக்கான இங்கிலாந்து அணியில் ஸ்டோக்ஸ் சேர்க்கப்படவில்லை. 

இந்நிலையில் இந்த வழக்கின் மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது. ஸ்டோக்ஸ் குற்றமற்றவர் என்று நீதிபதி அறிவித்துள்ளார். ஸ்டோக்ஸின் நண்பர் ரேயான் அலிக்கும் சாதகமாகத் தீர்ப்பு கிடைத்துள்ளது. வழக்கு விசாரணையில் ஸ்டோக்ஸ் மீதான புகார் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டால் அவரது கிரிக்கெட் எதிர்காலம் பாதிக்கப்படும் என்கிற சூழல் நிலவியது. இந்நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஸ்டோக்ஸ் கிரிக்கெட் வாழ்வில் பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com