இந்திய முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா, 1984 லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக் போட்டியில் 400 மீ ஓட்டத்தில் நூலிழையில் வெண்கலப்பதக்கத்தை தவறவிட்டார். அப்போது தான் வெறும் அரிசிக் கஞ்சி, ஊறுகாய் மட்டுமே சாப்பிட்டு வந்தேன். போதிய சத்தான உணவு கிடைக்காததால் இறுதிச் சுற்றில் கடைசி 35 மீ ஓட்டம் பாதிக்கப்பட்டது என உஷா தெரிவித்தார்.
ஆசியப் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து கனத்த இதயத்துடன் விலகுவதாக மூத்த வீரர் லியாண்டர் பயஸ் அறிவித்துள்ளார். இரட்டையர் பிரிவுக்கு தனியாக நிபுணத்துவம் வாய்ந்த வீரர் கிடைக்காததால் , ஒற்றையர் பிரிவு வீரர் சுமித் நகாலுடன் இணந்து விளையாடுமாறு அகில இந்திய டென்னிஸ் சங்கம் கூறியது. இதனால் அதிருப்தி அடைந்த பயஸ் ஆசியப் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.
இந்தியா ரெட், இந்தியா புளு, இந்தியா கிரீன் அணிகளுக்கு இடையிலான துலிப் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் திண்டுக்கல் அருகே நத்தம் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் மின்னொளியில் பிங்க் நிற பந்துடன் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
ஆப்கன் கிரிக்கெட் அணி பயிற்சி பெற இந்தியா ஆதரவு அளித்தது போல், தங்களுக்கும் ஆதரவு தந்து ஊக்குவிக்க வேண்டும் என ஆசியப் போட்டியில் பங்கேற்கும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் கோரியுள்ளனர். தடகள வீரர்கள் அப்துல் வஹாப் ஸஹிரி, காமியா யுசுஃபி, சாடியா பிராமன்ட் ஆகியோர் தாங்கள் இந்தியாவில் பயிற்சி மேற்கொள்ள உதவ வேண்டும் என கோரியுள்ளனர்.
தெற்காசிய கால்பந்து போட்டி (சாஃப்) தயாராகும் வகையில் 22 பேர் கொண்ட இந்திய கால்பந்து அணி வெள்ளிக்கிழமை ஆஸ்திரேலியா புறப்பட்டுச் செல்கிறது.
பிரீமியர் லீக் கால்பந்து சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி கிளப்பின் மிட்பீல்டரும், பெல்ஜிய அணியின் நட்சத்திர வீரருமான கெவின் புருயன் பயிற்சியின் போது வலது காலில் காயமுற்றதால், தீவிர மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளார். உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பெல்ஜியம் அரையிறுதி வரை முன்னேற புருயனின் சிறப்பான ஆட்டமும் காரணமாகும்.