இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் தான் அரசியலில் களமிறங்கப்போவதில்லை என்று தெரிவித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் அரசியலில் களமிறங்கப்போவதாக வதந்திகள் கிளம்பியது. இந்நிலையில், அவர் அனைத்து ரக கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற்றார். இதனால், கம்பீர் அரசியல் பிரவேசம் குறித்தான வதந்திகள் வீரயம் பெற்றது.
இந்நிலையில், அரசியல் மற்றும் ஓய்வுக்குப் பிறகு தனது எதிர்காலம் குறித்தான கேள்விகளுக்கு கௌதம் கம்பீர் பதிலளித்தார். இதுதொடர்பாக அவர் தெரிவித்ததாவது,
"நான் அரசியலில் களமிறங்கப்போவதில்லை. இதுதொடர்பான வதந்திகளை நானும் கேட்டேன். ஒருவேலை நான் சமூக பிரச்னைகளை கையில் எடுப்பது இதற்கு காரணமாக இருக்கலாம். என்னை பொறுத்தவரை டிவிட்டர் பக்கம் மிக மிக முக்கியம். டிவிட்டர் போன்ற தளத்தில் நகைச்சுவை மேற்கொள்ளும் சுபாவம் உடையவன் அல்ல நான்.
இந்த நாட்டின் ஒரு குடிமகனாக சமூக பிரச்னைகளை கையில் எடுப்பது எனது உரிமையாகும். அதனால் தான் நான் அரசியலில் களமிறங்கப்போகிறேன் என்ற வதந்திகள் கிளம்பியிருக்கலாம். ஆனால், அப்படி ஒன்றும் இல்லை. அரசியல் முற்றிலுமாக வேறு ஒரு துறை. 25 ஆண்டுகளாக நான் ஒன்றும் செய்யவில்லை. அதனால், இனிமேல் நான் என்ன செய்யப்போகிறேன் என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.
செயல்பாடுதான் என்னை எப்போதும் ஊக்கமடையச் செய்யும். செயல்பாடு என்பது நிச்சயம் ஏசி அறையில் அமர்ந்து வர்ணணை செய்வது போன்ற செயல்கள் அல்ல. வீரராக இருப்பதால் சிறந்த பயிற்சியாளராக இருக்கமுடியுமா என்று தெரியவில்லை. நான் சிறந்த பயிற்சியாளராக இருக்கமுடியுமா என்பதை மதிப்பீடு செய்யவேண்டும். எனக்கு வலிமை, ஆர்வம், அதை செய்யவேண்டும் என்ற அர்ப்பணிப்பு இருக்கிறதா என்று அனைத்தையும் பொறுத்திருந்து பார்க்கவேண்டும். அதன்பிறகு, அது குறித்து சிந்திப்பேன்.
நிர்வாகம் செய்வதில் நான் மிகவும் நேரடியாக செயல்படுபவன். அதனால், எந்த இடமாக இருந்தாலும் என்னை ஏற்றுக்கொள்வார்கள் என்று எனக்கு தோன்றவில்லை" என்றார்.