சீனாவின் குவாங்ஷுவில் நடைபெற்று வரும் பாட்மிண்டன் வேர்ல்ட் டூர் பைனல்ஸ் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, அபாரமாக ஆடி உலகின் முதல்நிலை வீராங்கனை டை சூ யிங்கின் வெற்றிப்பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
குரூப் ஏ மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்துவும்-டை சூ யிங்கும் மோதினர். இருவரும் மாறி மாறி புள்ளிகளை குவித்ததால் ஆட்டம் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது. முதல் கேமை 14-21 என்ற புள்ளிக்கணக்கில் சிந்து இழந்தார்.
எனினும் அடுத்த இரண்டு கேம்களில் ஆதிக்கம் செலுத்தி 21-16, 21-8 என்ற கணக்கில் வென்றார். இதன் மூலம் டைசூவின் வெற்றிப்பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதற்கு முன்பு இருவரும் 13 முறை மோதியதில் 6 முறை சிந்து தொடர்ந்து தோல்வியடைந்தார்.
சமீர் வர்மா அபாரம்
குரூப் பி பிரிவு ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சமீர் வர்மா முதல் ஆட்டத்தில் உலகின் முதல்நிலை வீரர் மொமடோவிடம் தோல்வியுற்றார்.
இந்நிலையில் வியாழக்கிழமை நடந்த இரண்டாவது ஆட்டத்தில் இந்தோனேஷிய அதிரடி வீரர் டாமி சுகிர்தோவை 21-16, 21-7 என்ற கேம் கணக்கில் தோல்வியுறச் செய்தார்.
இதன் மூலம் தனது நாக் அவுட் சுற்று வாய்ப்பை தக்க வைத்துள்ளார்.
அடுத்த ஆட்டத்தில் தாய்லாந்தின் வாங்சரோனை எதிர்கொள்கிறார் சமீர். ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களைப் பெறுவோர் அரையிறுதிக்கு தகுதி பெறுவர்.