வருகிற 2019 50 ஓவர் உலகக் கோப்பையை இந்தியா நிச்சயம் வெல்லும் என முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்தார்.
50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் 2019-ஆம் ஆண்டு மே 30 முதல் ஜூலை 14 வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. இந்த உலகக் கோப்பைத் தொடரை பிரபலப்படுத்தும் விதமாக உலகம் முழுவதும் கோப்பை கொண்டு செல்லப்படுகிறது.
அவ்வகையில் நவம்பர் 30-ஆம் தேதி உலகக் கோப்பை 8-ஆவது நாடாக இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது. டிசம்பர் 2-ஆம் தேதி மும்பை, டிசம்பர் 8-ஆம் தேதி பெங்களூரு, டிசம்பர் 14-ஆம் தேதி கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கு தற்போது வரை எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கலந்துகொண்டார். அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கங்குலி பேசியதாவது:
இது மிகச்சிறந்த நிகழ்ச்சியாகும். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் இதற்கு முன்பும் கலந்துகொண்டுள்ளேன். 2019 உலகக் கோப்பை மிகப்பெரிய தொடராக அமைய வாய்ப்புள்ளது. இந்தத் தொடரில் வெற்றிபெற்று உலகக் கோப்பையை இந்திய அணி நிச்சயம் கைப்பற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.