மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் வங்கதேசம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து, அந்த அணி சொந்த மண்ணில் நடைபெற்ற 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
வங்கதேசத்தின் சைலெட் நகரில் வெள்ளிக்கிழமை பகலிரவாக நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய வங்கதேசம் 38. 3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் அடித்து வெற்றி கண்டது.
முன்னதாக டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச தீர்மானித்தது. பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகளில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் மட்டும் 108 ரன்கள் விளாச, அவரோடு தேவேந்திர பிஷு 6 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தார். வங்கதேச தரப்பில் மெஹதி ஹசன் மிராஸ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.
பின்னர் ஆடிய வங்கதேசத்தில் செளம்யா சர்க்கார் 80, லிட்டன் தாஸ் 23 ரன்கள் சேர்த்து உதவ, தமிம் இக்பால் 81, முஷ்ஃபிகர் ரஹிம் 16 ரன்கள் அடித்து அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனர். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கீமோ பால் 2 விக்கெட்டுகள் சாய்த்தார். வங்கதேச வீரர் மெஹதி ஹசன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.