இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2-ஆவது ஆட்டம் செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது.
இந்நிலையில், 2-ஆவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, இந்திய பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 32.2 ஓவர்களில் 118 ரன்களுக்குச் சுருண்டது.
அதிகபட்சமாக டுமினி, சோண்டோ ஆகியோர் தலா 25 ரன்கள் எடுத்தனர். ஆம்லா 23 ரன்களும், டிகாக் 20 ரன்களும் சேர்த்தனர். இதர வீரர்கள் சொற்ப ரன்களுக்கு வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.
இந்திய தரப்பில் அற்புதமாக பந்துவீசிய சாஹல் 8.2 ஓவர்களில் 22 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். ஒருநாள் போட்டிகளில் சாஹல், 5 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்துவது இதுவே முதன்முறையாகும்.
குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும், புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகியோர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.