தீவிர ஆட்டமே எனது பலம்: விராட் கோலி

தீவிரமாக ஆடுவதே எனது பலம். அந்தத் தன்மையை இழக்கும் பட்சத்தில் களத்தில் நான் எவ்வாறு விளையாடுவேன் என்று எனக்கே தெரியவில்லை என இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறினார்.
தீவிர ஆட்டமே எனது பலம்: விராட் கோலி

தீவிரமாக ஆடுவதே எனது பலம். அந்தத் தன்மையை இழக்கும் பட்சத்தில் களத்தில் நான் எவ்வாறு விளையாடுவேன் என்று எனக்கே தெரியவில்லை என இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறினார்.
கேப் டவுனில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 124 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்த ஆட்டத்தில் கோலி ஆட்டமிழக்காமல் 160 ரன்கள் விளாசியிருந்தார். இது ஒருநாள் போட்டிகளில் அவரது 2-ஆவது அதிகபட்ச ரன்கள். அத்துடன், நியூலேண்ட்ஸ் மைதானத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சதம் விளாசிய முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார்.
மேலும், இந்திய கேப்டனாக 12 சதங்கள் விளாசி செüரவ் கங்குலியின் சாதனையையும் (11 சதங்கள்) தாண்டினார்.
இந்நிலையில், தனது ஆட்டம் குறித்து அவர் கூறியதாவது:
இந்த ஆண்டில் 30 வயதை எட்டுகிறேன். இப்போது வெளிப்படுத்தும் ஆட்டத்தை 34-35 வயதிலும் விளையாட விரும்புகிறேன். அதனாலேயே அதிகமாக பயிற்சி எடுத்துக்கொள்கிறேன். ஏனெனில், தீவிரமாக ஆடுவதே எனது விருப்பமாகும்.
அந்த ஆட்டத் தன்மையை இழக்கும் பட்சத்தில் களத்தில் நான் என்ன செய்யப்போகிறேன் என்று எனக்கே தெரியவில்லை. எனவே, முடிந்த வரையில் தீவிரமாக ஆடுவதை பாதுகாத்துக்கொள்ள முயற்சிக்கிறேன். அதற்காக பயிற்சி செய்வதோடு, உணவுக் கட்டுப்பாட்டுடன் இருக்கிறேன்.
அதுபோன்ற தியாகங்களுக்கு இதுபோன்ற வெற்றி நாள்கள் பலனாக கிடைக்கிறது. அணிக்கு தேவை ஏற்படும்போது முடிந்ததைச் செய்ய வேண்டும். ஒரு வீரராக இதுபோன்ற நாள்களுக்காகவே காத்திருக்கிறோம். 3-ஆவது ஆட்டத்தில் அடித்த சதம் சிறப்பான ஒன்றாகும்.
சர்வதேச போட்டிகளில் ரன்கள் எடுப்பது எளிதல்ல. பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தின் சூழ்நிலை வேறு. ஆனால், இதுபோல பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் அதற்கேற்றவாறு நமது ஆட்டத்தை தகவமைத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.
அணிக்கான தேவையை கருத்தில் கொள்ளும்போது, நம்மையும் மீறிய ஒரு உந்துதல் நமது இயக்கத்தை ஊக்குவிக்கும். அதுவே, இதுபோன்ற ரன்குவிப்புகளுக்கு உதவியாக இருக்கிறது. அது ஒரு அற்புதமான உணர்வு.
கேப் டவுன் ஆட்டத்தில் முதலில் பேட் செய்யும்போது, தவனுடன் ஆடுகையில் சிங்கிள்களாக ஆடிவந்தேன். அப்போது அந்த பார்ட்னர்ஷிப்பை நீட்டிப்பது தேவையாக இருந்தது. அதுவே, அவர் ஆட்டமிழந்த பிறகு எனது ஆட்டத்தை தீவிரமாக்கினேன். சேஸ் செய்ய 2-ஆவதாக பேட் செய்யும்போது இலக்கு என்ன என்பது தெரிந்துவிடும். எனவே, தேவைக்கேற்றவாறு ஆட்டத்தில் ஏற்ற இறக்கத்துடன் ஆடினால் சரியாக இருக்கும்.
கடினமாக உழைத்து கடைசி டெஸ்டிலும், முதல் 3 ஒருநாள் ஆட்டங்களிலும் வென்றுள்ளோம். ஒர் அணியாக பெருமையாக உணர்கிறோம். எனினும், இந்தத் தொடரில் எங்கள் பணி இன்னும் முழுமையடையவில்லை என்று கோலி 
கூறினார்.

சாஹல், யாதவ் பந்துவீச்சு அபாரமானது

ஒருநாள் தொடரின் முதல் 3 ஆட்டங்களில் யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் கூட்டாக 21 விக்கெட்டுகள் சாய்த்துள்ளனர். தென் ஆப்பிரிக்க வீரர்கள் தடுமாறும் அவர்களின் பந்துவீச்சு குறித்து கோலி கூறியதாவது:
யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் தங்களது சுழற்பந்து வலையில் எதிரணியை ஒட்டுமொத்தமாக சுருட்டியது மிகச் சிறப்பான பணியாகும். அதை விவரிக்க வார்த்தைகள் இல்லை. அது நம்பமுடியாத ஒன்றாக இருந்தது. அவர்களது ஒவ்வொரு பந்தும் பேட்ஸ்மேன்களுக்கு சவால் விடுவதாக இருக்கிறது.
அவர்களுக்கான டெஸ்ட் போட்டி வாய்ப்பு குறித்து இப்போது ஏதும் கூற இயலாது. அது எதிர்காலத்தைப் பொருத்ததே என்று கோலி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com