காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், நடைப்பந்தயத்தில் இந்தியாவின் சார்பில் 4 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது.
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் ஏப்ரல் 4-ஆம் தேதி தொடங்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 20 கி.மீட்டர் நடைப்பந்தயத்தில் பங்கேற்க 2 ஆடவர் மற்றும் 2 மகளிர் அடங்கிய அணியை இந்திய தடகள சம்மேளனம் தேர்வு செய்துள்ளது.
ஆடவருக்கான 20 கி.மீ. நடைப்பந்தயத்தில் கே.டி.இர்ஃபான், மணீஷ் சிங் ராவத் ஆகியோர் பங்கேற்கின்றனர். இவர்கள் சமீபத்தில் நிறைவடைந்த 5-ஆவது தேசிய நடைப்பந்தய சாம்பியன்ஷிப்பில் முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் வென்றது குறிப்பிடத்தக்கது.
மகளிருக்கான 20 கி.மீ. பிரிவில் செüம்யா பேபி, குஷ்பிர் கெüர் ஆகியோர் பங்கேற்கின்றனர். இவர்களும் அதே தேசிய சாம்பியன்ஷிப்பில் முறையே முதல் இரு இடங்களைப் பிடித்தது நினைவுகூரத்தக்கது.
இதனிடையே, சீனாவில் மே மாதம் நடைபெறவுள்ள உலக நடைப்பந்தய சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவருக்கான 50 கி.மீ. நடைப்பந்தயத்தில் இந்தியாவின் சார்பில் பங்கேற்க சந்தீப் சிங், ஜிதேந்திர சிங் ரத்தோர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஜப்பானில் மார்ச் மாதம் நடைபெறும் ஆசிய 20 கி.மீ. நடைப்பந்தயத்தில் பங்கேற்க ஆடவர் பிரிவில் நீரஜ் ரதியும், மகளிர் பிரிவில் கரம்ஜித் கெüரும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் தவிர ஓபன் பிரிவில் பங்கேற்க 6 பேர் தேர்வாகியுள்ளனர்.
ஆசிய போட்டி முடிவுகளின் அடிப்படையில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்படுவர்.