பிரசவத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட இறந்து போனேன்: செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சித் தகவல்!

மருத்துவர்களின் அக்கறையில்லாமல் போயிருந்தால் இன்று நான் உயிருடன் இருந்திருக்க மாட்டேன் என்று உணர்வுபூர்வமாக எழுதியுள்ளார்...
பிரசவத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட இறந்து போனேன்: செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சித் தகவல்!

பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸுக்குக் கடந்த செப்டம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது. ஃபுளோரிடா மாகாணத்தின் மேற்கு பால்ம் பீச் பகுதியில் உள்ள புனித மேரி மருத்துவ மையத்தில் பிறந்த குழந்தைக்கு அலெக்ஸிஸ் ஒலிம்பியா ஒஹானியன் ஜூனியர் எனப் பெயரிட்டார் செரீனா. அடுத்தச் சில மாதங்களில் தன் காதலரும் பிரபல இணையதளமான "ரெட்டிட்'-இன் உரிமையாளர்களில் ஒருவருமான அலெக்ஸிஸ் ஒஹானியனைத் (34) திருமணம் செய்துகொண்டார். 

இந்நிலையில் சிஎன்என் ஊடகத்தில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறியுள்ளதாவது:

என் மகள் பிறந்தபோது நான் கிட்டத்தட்ட இறந்துவிட்டேன். உயிர் பிழைத்ததை அதிர்ஷ்டமாக எண்ணுகிறேன். என் மகள் பிறக்கும்வரை எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. குழந்தை பிறந்த 24 மணி நேரம் கழித்து எனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அடுத்த ஆறு வாரங்கள் நிலைமை மோசமாக இருந்தது. நுரையீரல் தொற்றுநோய் காரணமாக எனக்கு அறுவைசிகிச்சைகள் நடைபெற்றன. 

மிகத்திறமையான மருத்துவர்கள், செவிலியர்களால் மீண்டும் பழைய நிலைமையை அடைந்தேன். சிக்கலான தருணங்களை எப்படிக் கையாளவேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். அவர்களுடைய அக்கறையில்லாமல் போயிருந்தால் இன்று நான் உயிருடன் இருந்திருக்க மாட்டேன் என்று உணர்வுபூர்வமாக எழுதியுள்ளார். 

கடந்த வருட ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின்போது 3 மாதம் கர்ப்பமாக இருந்தார் செரீனா வில்லியம்ஸ். எனினும் துணிச்சலுடன் போட்டியில் கலந்துகொண்டு சாம்பியனாகவும் ஆனார். இந்தப் பட்டத்தை வென்றதன் மூலம் 'ஓபன் எரா'வில் (1968-ல் அமெச்சூர் வீரர்களுடன் தொழில்முறை வீரர்களும் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். அது முதலான காலமே "ஓபன் எரா' ஆகும்.) அதிக பட்டங்களை (23) வென்றவர் என்ற சாதனையைப் படைத்தார் செரீனா. முன்னதாக ஸ்டெஃபி கிராஃப் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றிருந்ததே சாதனையாக இருந்தது. இன்னும் ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும்பட்சத்தில் மகளிர் டென்னிஸ் வரலாற்றில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான மார்க்ரெட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்வார் செரீனா.

வெள்ளையர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த பணக்காரர்களின் விளையாட்டான டென்னிஸில் தொழில்முறை வீராங்கனையாக 1995-ல் செரீனா கால் பதித்தார். அப்போது அவருக்கு வயது 14. அதன்பிறகு அபாரமாக ஆடிய செரீனா 1998-ல் முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியில் ஆடும் வாய்ப்பை பெற்றார். அந்தப் போட்டியின் 2-வது சுற்றில் தனது மூத்த சகோதரியான வீனஸிடம் தோல்வி கண்ட செரீனா, 1999-ல் நடைபெற்ற அமெரிக்க ஓபனில் ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸை வீழ்த்தி முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார். அதன்பிறகு டென்னிஸ் உலகின் தவிர்க்க முடியாத வீராங்கனையாக உருவெடுத்த செரீனா, ஏறக்குறைய 6 ஆண்டுகள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com