கணுக்காலில் காயம் ஏற்பட்டதால் கடந்த சில நாள்களாக உடல்நலக்குறைவுடன் இருந்த தொடக்க வீரர் ஷிகர் தவன் தற்போது முழுமையாகக் குணமடைந்துள்ளதாக பிசிசிஐ ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனால் முதல் டெஸ்டில் பங்குபெற முழு உடற்தகுதியை அடைந்துள்ளார் தவன். இதையடுத்து ஷிகர் தவன் - விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களமிறங்கவுள்ளார்கள்.
ஆனால் ஆல்ரவுண்டர் ஜடேஜா வைரஸ் காய்ச்சலால் கடந்த இருநாள்களாக அவதிப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ மருத்துவக்குழு அவரைக் கண்காணித்து வருவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் இடம்பிடிப்பார் என்று அறியப்படுகிறது.
தென் ஆப்பிரிக்க அணியுடன் 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களைக் கொண்ட தொடர்களில் விளையாடுவதற்காக அந்நாட்டுக்குச் சென்றுள்ளது இந்திய அணி. கடந்த 25 ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணி ஒரு டெஸ்ட் தொடரைக் கூட வென்றதில்லை. அதிகபட்சமாக, 2010-11 காலகட்டத்தில் 2 போட்டிகளைக் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்துள்ளது இந்தியா. வெள்ளிக்கிழமை முதல் டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது.