பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 315 ரன்கள் குவித்து டிஎல்எஸ் முறையில் 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
வெலிங்டனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆரம்பம் முதலே நியூஸி. வீரர்கள் அதிரடியாக விளையாடினார்கள். 35 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஹசன் அலி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் மன்ரோ. கப்தில் 48 ரன்கள் எடுத்து வலுவான தொடக்கத்தை அமைத்துக்கொடுத்தார். இதனால் அடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்சன் சதமெடுத்து பிறகு 115 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் அசத்தலாக ஆடியதால் நியூஸிலாந்து அணியால் 300 ரன்களைத் தாண்டமுடிந்தது. பின்வரிசையில் களமிறங்கிய நிகோல்ஸ் அரை சதமெடுத்தார்.
நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணிக்குக் கடுமையான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணி 30.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டது. ஃபகார் ஜமான் 82, அஸ்ரஃப் 17 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். ஆனால் தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டத்தைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து டிஎல்எஸ் முறையில் 61 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.