பார்வையற்றோருக்கான 5-ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துபையில் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஷார்ஜா மைதானத்தில் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்தின.
இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 308 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பாதர் முனிர் 57, ரியாஸத் கான் 48 மற்றும் கேப்டன் நிசார் அலி 47 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் ஆடிய இந்திய அணி 38.2 ஓவர்களில் 8 பந்துகள் மட்டுமே மீதமிருக்கையில் 8 விக்கெட்டுகளை இழந்து 309 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. இந்திய வீரர் சுனில் ரமேஷ் 93 ரன்களும், அஜய் ரெட்டி 62 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.
இதன்மூலம் பார்வையற்றோர் கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்திய அணி தக்க வைத்துக்கொண்டது. முன்னதாக, 2014-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பை தொடரின்போதும் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
வெற்றிபெற்ற பார்வையற்றோர் இந்திய கிரிக்கெட் அணிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:
உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். நீங்கள் இந்தியாவை பெருமைப்படுத்திவிட்டீர்கள். எங்கள் அனைவருக்கும் உங்கள் திறமையால் முன்மாதிரியாக திகழ்கிறீர்கள் என்று கூறியுள்ளார்.