உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதிச் சுற்றுக்கு பிரான்ஸ் அணி முன்னேறியது.
பரபரப்பாக நடந்த அரையிறுதி ஆட்டத்தில் பெல்ஜியத்தை 1-0 என வீழ்த்தியது
முதல் அரையிறுதி ஆட்டம் செயின்ட்பீட்டர்ஸ்பர்க் மைதானத்தில் பிரான்ஸ்-பெல்ஜியம் அணிகளுக்கு இடையே திங்கள்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.
காலிறுதியில் பிரான்ஸ் அணி உருகுவேயையும், பெல்ஜியம் முன்னாள் சாம்பியன் பிரேஸிலையும் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
1998-இல் பட்டம் வென்ற பிரான்ஸ் தற்போது இரண்டாவது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பிலும், முதல் முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் பெல்ஜியம் அணியும் மோதுவதால் இந்த ஆட்டத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.
ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டன. 18-ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் பிளேய்ஸ் மட்யுடி பெல்ஜிய கோல்பகுதியை நோக்கி அடித்த பந்து குறி தவறிச் சென்றது.
இதற்கிடையே பெல்ஜிய வீரர்கள் கோலடிக்க மேற்கொண்ட முயற்சிகளும் பலனளிக்கவில்லை. அதே நேரத்தில் பிரான்ஸ் முன்கள வீரர் ஆலிவர் ஜிராட் பலமுறை பெல்ஜிய கோல் பகுதியில் ஊடுருவி கோலடிக்க முயன்றார்.
முதல் பாதி ஆட்டம் முடிய சில நிமிடம் இருந்த நேரத்தில் பிரான்ஸ் அணிக்கு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நட்சத்திர வீரர் கிரைஸ்மேன் சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை.
முதல் பாதி ஆட்டம் கோலின்றி 0-0 என முடிந்தது.
இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியதும் 51-ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கிரைஸ்மேன் கார்னர் மூலம் அனுப்பிய பந்தை தலையால் முட்டி அற்புதமாக கோலாக்கினார் சாமுவேல் உதிதி. பின்னர் பெல்ஜிய வீரர்கள் சமன் செய்வதற்காக பலமுறை முயன்றும் பிரான்ஸ் தற்காப்பு அரணை தகர்க்க முடியவில்லை.
இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று மூன்றாவது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.