கரூரில் கடந்த இரு நாள்களாக நடைபெற்ற மாநில அளவிலான செஸ் போட்டியில் கன்னியாகுமரி மாணவர் முதலிடம் பிடித்தார்.
கரூரில் கிங் செஸ் அகாதெமி சார்பில் ஏ.வீரப்பன் செட்டியார் நினைவு மாநில அளவிலான செஸ் போட்டி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது. இப்போட்டியில் கரூர், மதுரை, திருச்சி, கன்னியாகுமரி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
ஓபன் பிரிவில் நடைபெற்ற போட்டியில் முதலிடத்தை கன்னியாகுமரி வீரர் என். லோகேஷ் பிடித்தார். இவருக்கு முதல் பரிசாக ரூ.6,000 மற்றும் கோப்பை, இரண்டாமிடம் பிடித்த மதுரை வீரர் எஸ்.எஸ். மணிகண்டனுக்கு ரூ.4,000 மற்றும் கேடயம், மூன்றாமிடம் பிடித்த சென்னை வீரர் முத்தையாவுக்கு ரூ.3,000 மற்றும் கேடயத்தை கரூர் வைஸ்யா வங்கியின் தலைவர் ஜே.நடராஜன் வழங்கினார்.
இதில் கரூர் மாவட்ட சதுரங்க கழகத் தலைவர் சி. சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போட்டிக்கான ஏற்பாடுகளை கிங் செஸ் அகாதெமியின் கரூர் மாவட்டச் செயலர் என். செல்லமுத்து, தலைவர் வி. தர்மராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.