இந்திய கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரிக்கு ஆதரவாக இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி பேசியுள்ளார். இதுகுறித்து விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட விடியோவில் இந்தியாவில் உள்ள அனைத்து விளையாட்டையும் ஊக்குவிக்கும் விதமாக நேரில் சென்று ஆதரவு அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் பேசியதாவது:
எனது நண்பரும், இந்திய கால்பந்து அணியின் கேப்டனுமான சுனில் சேத்ரி பதிவுக்கு அனைவரும் ஆதரவளியுங்கள். இந்திய கால்பந்து அணி ஆடும் ஆட்டங்களுக்கு மைதானத்துக்கு நேரில் சென்று ஆதரவு தாருங்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விளையாட்டும் மிகவும் பிடித்திருக்கும். எனவே அந்தந்த விளையாட்டுகளுக்கு மைதானத்தில் நேரில் சென்று ஆதரவு அளியுங்கள்.
இந்திய கால்பந்து அணி மிகச் சிறந்த அணியாகும். திறமை வாய்ந்த வீரர்கள் உள்ளனர். ஒவ்வொரு போட்டியிலும் தங்கள் ஆட்டத்திறனை மேம்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் விளையாட்டை மேம்படுத்தும் விதமாக அனைத்து விளையாட்டையும் ஒருமாதிரியாக கருத வேண்டும்.
ஒருநாள் உங்களின் பிள்ளைகளும் சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவெடுக்கலாம். அவர்களுக்கும் இதுபோன்று ஆதரவு தேவைப்படும். எனவே நமது நாட்டின் விளையாட்டு வீரர்களுக்கு உங்களால் இயன்ற உதவியான ஆதரவை நிச்சயம் அளித்திடுங்கள்.
இந்தியாவில் உள்ள அனைத்து விளையாட்டையும் ஊக்குவிக்கும் விதமாக தயவு செய்து ஒவ்வொருவரும் நேரில் சென்று ஆதரவு அளிக்க வேண்டுகிறேன், மிக்க நன்றி என்றார்.