இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் போட்டி பெங்களூருவில் வியாழக்கிழமை தொடங்கியது. சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆப்கானிஸ்தான் தனது முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கியது.
இதில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. மேலும் இரண்டே நாட்களில் இந்தப் போட்டியும் நிறைவடைந்தது. அதிலும் குறிப்பாக 2-ஆம் நாள் ஆட்டத்திலேயே ஆப்கானிஸ்தான் அணி இரு இன்னிங்ஸ்களிலும் ஆட்டமிழந்துள்ளது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் சதமடித்த துவக்க வீரர் முரளி விஜய், இரு புதிய சாதனைகளைப் படைத்துள்ளார். 153 பந்துகளைச் சந்தித்து 15 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரின் உதவியோடு 105 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இதன்மூலம் முன்னாள் இங்கிலாந்து வீரர் டாம் க்ராவெனி மற்றும் ஏ.ப்ரின்ஸ் ஆகியோரது சாதனைகளை முறியடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 2-ஆவது இன்னிங்ஸில் சதமடிக்காமல் முதல் இன்னிங்ஸில் மட்டும் அதிக சதங்கள் அடித்துள்ளார். முதல் இன்னிங்ஸில் மட்டும் இதுவரை 12 சதங்களை பதிவு செய்துள்ள விஜய், 2-ஆவது இன்னிங்ஸில் அதிகபட்சமாக 2014-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் 99 ரன்கள் சேர்த்துள்ளார்.
அதுபோல இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சதமடித்த துவக்க வீரர்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தைப் பிடித்தார். கடைசியாக இலங்கைக்கு எதிராக நாக்பூரில் 128, இலங்கைக்கு எதிராக புது தில்லியில் 155 மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பெங்களூருவில் 105 ரன்கள் என கடைசி 3 போட்டியிலும் ஹாட்ரிக் சதமடித்துள்ளார்.
2-ஆம் இடத்தை இந்தியாவின் கௌதம் கம்பீர் மற்றும் இங்கிலாந்தின் அலஸ்டைர் கூக் ஆகியோருடன் பகிர்ந்துகொண்டுள்ளார். தொடர்ந்து 4 டெஸ்ட் போட்டிகளில் சதமடித்து இந்தியாவின் அதிரடி துவக்க வீரர் வீரேந்திர சேவாக் முதலிடத்தில் உள்ளார்.