நெதர்லாந்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 4-0 என்ற கோல் கணக்கில் பந்தாடியது.
விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா 25-ஆவது நிமிடத்தில் கோல் கணக்கை தொடங்கியது. அணியின் சிம்ரன்ஜீத் பாஸ் செய்த பந்தை, ரமண்தீப் சிங் அருமையான கோலாக மாற்றினார். பாகிஸ்தானுக்கு கோல் வாய்ப்புகளை வழங்காத இந்தியா, முதல் பாதி முடிவில் 1-0 என முன்னிலையில் இருந்தது.
பிற்பாதி ஆட்டத்திலும் இந்தியாவின் கையே ஓங்கியிருந்தது. ஆட்டத்தின் 54-ஆவது நிமிடத்தில் சிம்ரன்சிங் உதவியுடன் அணியின் கோல் எண்ணிக்கையை 2-ஆக உயர்த்தினார் தில்பிரீத் சிங். அடுத்த 3 நிமிடங்களிலேயே மன்தீப் சிங் தனது பங்கிற்கு ஒரு கோலடிக்க இந்தியா 3-0 என முன்னேறியது. பாகிஸ்தான் தனது முதல் கோலுக்காக போராடி வந்த நிலையில், ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் இந்தியாவின் லலித் உபாத்யாய் ஒரு கோல் அடிக்க, இறுதியில் இந்தியா 4-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.