இலங்கையில் 10 நாள்களுக்கு அவசரநிலையை அந்நாட்டு அரசு பிரகடனம் செய்துள்ளது. கண்டியில் சிங்கள புத்த மதத்தினருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே மூண்ட கலவரத்தை கட்டுப்படுத்தும் வகையில், இந்த நடவடிக்கையை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது.
இந்நிலையில் இலங்கை நிலவரம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சங்கக்காராவும் மஹேலா ஜெயவர்தனேவும் வெளிப்படையாகத் தங்கள் கருத்துகளைக் கூறியுள்ளார்கள்.
சங்கக்காரா ட்விட்டரில் கூறியதாவது:
மதம், இன ரீதியாக இலங்கையில் எந்தவொரு குடிமகனும் துன்புறுத்தப்படக்கூடாது. ஒதுக்கப்படக்கூடாது. மிரட்டப்படக்கூடாது. நாம் அனைவரும் ஒரு தேசத்து மக்கள். அன்பு, நம்பிக்கை, ஏற்றுக்கொள்ளுதல் போன்றவை நம் பொதுவான தாரக மந்திரமாக இருக்க வேண்டும். இங்கு இன வேறுபாடுக்கோ, வன்முறைக்கோ இடமில்லை. அனைவரும் ஒற்றுமையுடன் இதை எதிர்கொள்வோம் என்று கூறியுள்ளார்.
மற்றொரு முன்னாள் வீரரான மஹேலா ஜெயவர்தனே ட்விட்டரில் கூறியதாவது: நடைபெறும் வன்முறைகளுக்கு என் கண்டனத்தைப் பதிவு செய்கிறேன். இதில் ஈடுபட்ட அனைவரும், அவர் எந்த இனம், மதமாக இருந்தாலும் சட்டத்தின் முன்பு கொண்டுவரப்படவேண்டும். 25 வருடங்களாக நீடித்த போர்களுக்கு மத்தியில் வாழ்ந்துள்ளேன். அடுத்தத் தலைமுறையும் அதை அனுபவிக்கக்கூடாது என்று கூறியுள்ளார்.