விதர்பா - ரெஸ்ட் ஆஃப் இந்தியா ஆகிய அணிகளுக்கிடையிலான இரானி கோப்பை போட்டி நாகபுரியில் இன்று தொடங்கியுள்ளது.
டாஸ் வென்ற விதர்பா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. கருண் நாயர் தலைமையிலான ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் மயங்க் அகர்வால், பிருத்வி ஷா, அஸ்வின் போன்றோர் இடம்பெற்றுள்ளார்கள்.
தொடக்க வீரர்களான ஃபஸலும் சஞ்சயும் அருமையாக விளையாடினார்கள். இருவரும் இணைந்து 101 ரன்கள் சேர்த்தபோது சஞ்சய் 53 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ஜோடி சேர்ந்த ஃபஸலும் ஜாஃபரும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா பந்துவீச்சாளர்களுக்கு மேலும் நெருக்கடி அளித்தார்கள்.
சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஃபஸல் 89 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பிறகு, வாசிம் ஜாபர் சதமெடுத்து அசத்தினார்.
முதல்நாள் முடிவில் விதர்பா அணி 90 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் குவித்துள்ளது. ஜாஃபர் 113, கணேஷ் சதீஷ் 29 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். ரெஸ்ட் ஆஃப் இந்தியா தரப்பில் அஸ்வினும் ஜெயந்த் யாதவும் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார்கள்.