11 சீசன் ஐபிஎல் போட்டிகள் வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது. 2 வருட தடைக்குப் பின்னர் இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீண்டும் களமிறங்குகின்றன.
இதில் கடந்த 10 சீசன்களாக ஐபிஎல் கோப்பை வெல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இம்முறை கோப்பையைக் கைப்பற்றும் முனைப்பில் புதிய திட்டங்களை வகுத்து போட்டிகளுக்கு தயாராகி வருகிறது.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி, இந்த ஐபிஎல் தொடரில் இதர அணிகளுக்கு கடும் சவால் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம்பெற்றிருந்த வேகபந்துவீச்சாளர் நாதன் கௌடர் நைலுக்கு திடீரென காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த அணி மாற்று வீரரை தேர்வு செய்ய ஐபிஎல் நிர்வாகம் அனுமதி வழங்கியது.
எனவே ஐபிஎல் விதிகளின்படி ஏலத்தில் இடம்பிடித்த வீரர்களில் இருந்து மாற்று வீரரை தேர்வு செய்துகொள்ள வேண்டும். அவ்வகையில் நியூஸிலாந்தின் ஆல்-ரவுண்டர் கோரி ஆண்டர்சன், அவரது அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.