இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி டேராடூனில் இருந்து காரில் தில்லி வரும்போது விபத்தில் சிக்கி லேசான காயம் அடைந்தார். டேராடூனில் உள்ள கிரிக்கெட் அகாதெமி ஒன்றில் புத்துணர்ச்சி மற்றும் பயிற்சிக்காக சென்றிருந்த ஷமி, தில்லியை நோக்கி தனது காரில் சனிக்கிழமை வந்துகொண்டிருந்தார். அப்போது டிரக் ஒன்றுடன் அவரது கார் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் லேசான காயமடைந்த ஷமிக்கு தலையில் தையல்கள் போடப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஷமி பயிற்சி பெற்ற கிரிக்கெட் அகாதெமியின் உரிமையாளர் அபிமன்யு ஈஸ்வரன் கூறியதாவது: ஷமி நலமுடன் இருக்கிறார். மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து தனிப்பட்ட இடத்தில் அவர் ஓய்வில் இருக்கிறார். மருத்துவர்கள் ஒருநாள் ஓய்வில் இருக்க அறிவுறுத்தினர். உடல்நலம் ஒத்துழைக்கும் பட்சத்தில் அவர் திங்கள்கிழமை தில்லி வருவார். இந்தக் காயத்தால் அவர் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதில் பாதிப்பு ஏதும் இல்லை என்று அபிமன்யு கூறினார். இந்த சீசனில் ஷமி டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.
முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹான், காவல்துறையில் குடும்ப வன்முறைப் புகார் அளித்துள்ளார். அதுதொடர்பாக கொல்கத்தா போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவருக்கு ஏற்பட்ட விபத்து குறித்து ஷமியின் மனைவி ஹசின் ஜஹான் கூறியதாவது:
அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொள்கிறேன். அவர் எனக்குச் செய்த காரியங்களுக்காகத்தான் அவரை எதிர்த்துப் போராடுகிறேன். அதற்காக அவர் காயங்களால் அவதிப்பட வேண்டும் என்று விரும்பவில்லை. அவர் என்னை மனைவியாக எண்ணாமல் இருக்கலாம். ஆனால் நான் அவரை இன்னமும் நினைத்துக்கொண்டிருக்கிறேன். இன்னமும் காதலிக்கிறேன். ஏனெனில் அவர் என் கணவர்.
என் மகளுடன் சென்று அவரைச் சந்திக்க எண்ணினேன். அவரைத் தொடர்புகொள்ள பல வழிகளில் முயற்சி செய்தேன். ஆனால் அவர் என் அழைப்புகளை ஏற்கவில்லை. அவர் எங்கு உள்ளார் என்பதையே என்னிடம் தெரிவிக்க அவருடைய குடும்ப உறுப்பினர்கள் மறுக்கிறார்கள். என்ன செய்வதென்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.