லி நிங் என்ற விளையாட்டு சீருடை நிறுவனத்துடன் இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) ஒப்பந்தம் செய்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் நரீந்தர் பத்ரா செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
2018 ஆசிய விளையாட்டு, யூத் ஒலிம்பிக் போட்டிகள், 2020- டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு சீருடைகள் வழங்கும் நிறுவனமாக லி நிங் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வீரர்களுக்கான சீருடை, பயிற்சி உடை, காலணி போன்றவற்றை அந்நிறுவனம் வழங்கும்.
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் விளையாட்டு சீருடை அதிகாரபூர்வ நிறுவனமாக லி நிங் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் இந்திய விளையாட்டுத் துறை சர்வதேச அளவில் மேம்பட்டு வருவதை அறியலாம் என்றார்.
பொதுச் செயலாளர் ராஜிவ் மேத்தா கூறுகையில்: இந்திய வீரர்களுக்கு லி நிங் அதிகாரபூர்வ சீருடை நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. வரும் 2020-ஆம் ஆண்டு வரை அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் தொடரும். ரியோ ஒலிம்பிக் போட்டிகளின் போது தரமான சீருடைகள் வழங்கியது போலவே வரும் பல்வேறு போட்டிகளுக்கும் வழங்கப்படும் என்றார்.