பிரெக்ஸிட் எதிரொலியாக நிகழாண்டு கிராண்ட் ஸ்லாம் போட்டிக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையில் பிரெஞ்ச் ஓபன் போட்டி முதலிடம் வகிக்கிறது.
டென்னிஸ் விளையாட்டில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், யுஎஸ் ஓபன் உள்ளிட்ட 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் முக்கியமானவையாகும். இதில் ஆஸி. ஓபன் முதலில் தொடங்குகிறது. யுஎஸ் ஓபனோடு கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் நிறைவு பெறுகின்றன.
இதில் விம்பிள்டன் போட்டியே மிகவும் பழைமையானதாகும்.
ஆண்டுதோறும் ஓபன் போட்டிகளை நடத்தும் அமைப்பாளர்கள் பரிசுத் தொகைகளை குறிப்பிட்ட சதவீதம் உயர்த்தி வருகின்றனர். பிரெஞ்ச் ஓபன் போட்டியில் நிகழாண்டு பரிசுத் தொகை ரூ.45.73 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இது ஆஸி. ஓபன், விம்பிள்டன் போட்டிகளின் பரிசுத் தொகையை விட கூடுதலாகும்.
முதல் சுற்றில் தோல்வி அடைவோர் 14.3 சதவீதம் உயர்த்தப்பட்டதொகையை பெறுவர். ஆடவர், மகளிர் ஒற்றையர் போட்டியில் முதலிடம் பெறுவோருக்கு 5 சதவீதம் தொகை உயர்த்தப்படுகிறது.
தற்போது பிரெஞ்ச் ஓபன் போட்டியின் நடுக்கள மைதானம் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு 400 மில்லியன் யுரோ செலவாகியுள்ளது. இது டென்னிஸ் கூட்டமைப்புக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தி உள்ளது. எனவே வரும் ஆண்டுகளில் பரிசுத் தொகை அதிகரிக்கப்பட வாய்ப்பில்லை என கூட்டமைப்பு தலைவர் பெர்னார்ட் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் விம்பிள்டனில் தான் அதிக பரிசுத் தொகை தரப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பிரெக்ஸிட் எதிரொலியாக பரிசுத் தொகை உயர்த்தப்படவில்லை. ஆஸி. ஓபனுக்கு 41.50 மில்லியன் அமெரிக்க டாலர்கள், விம்பிள்டனுக்கு 45.27 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகையாக உள்ளன.
வரும் ஆகஸ்ட் மாதம் நடக்கும் யுஎஸ் ஓபன் போட்டிக்கான பரிசுத் தொகை இன்னும் உயர்த்தி அறிவிக்கப்படவில்லை. கடந்த 2017-இல் இதன் பரிசுத் தொகை 50 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.