இங்கிலாந்தில் நடைபெறும் ஏடிபி ஃபைனல்ஸ் உலக டூர் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் தங்களது ரவுண்ட் ராபின் சுற்றுகளில் புதன்கிழமை வெற்றி பெற்றனர்.
இதில் ஃபெடரர் கனடாவின் டொமினிக் தீமை 6-2, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார். ஜோகோவிச் 6-4, 6-1 என்ற செட்களில் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவை வென்றார்.
இதையடுத்து ஃபெடரர் தனது அடுத்த சுற்றில் தென்னாப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனையும், ஜோகோவிச்- ஜப்பானின் கெய் நிஷிகோரியையும் எதிர்கொள்கின்றனர்.
குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை: இதனிடையே, டென்னிஸ் விளையாட்டின் வரலாற்றில் சிறந்த வீரர் என்ற அடையாளம் இருப்பதால், போட்டிகளில் தனக்கு சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஃபெடரர் மறுத்துள்ளார்.
20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர், தனது பிரபலத்தன்மையை பயன்படுத்தி தனக்கான போட்டி அட்டவணைகளில் மாற்றம் செய்துகொள்கிறார் என்று பிரான்ஸ் முன்னாள் வீரர் ஜூலியன் பெனட்டியு கூறியிருந்த நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து ஃபெடரர் இவ்வாறு கூறியுள்ளார்.
போட்டி ஏற்பாட்டாளர்கள் நான் விளையாடும் நேரம் குறித்து சில நேரம் என்னிடம் கேட்பார்கள். சில நேரம் எனது அணி நிர்வாகியிடம் கேட்பார்கள். இது மாற்றத்துக்கு உள்பட்டதுதான். எனக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்று ஃபெடரர் கூறினார்.
ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின்போது வெப்பம் தொடர்பான பிரச்னைகளை தவிர்ப்பதற்காக ஃபெடரருக்கான ஆட்டங்கள் அனைத்தும் இரவிலேயே நடத்தப்படுவதாக பெனட்டியு கூறியிருந்தார். இதனிடையே, அதற்கு பதில் கருத்து தெரிவித்த ஜோகோவிச், டென்னிஸ் விளையாட்டுக்கு ஃபெடரர் செய்துள்ள பங்களிப்புக்காக அவருக்கு அத்தகைய சிறப்பு ஏற்பாடுகள் செய்வதில் தவறில்லை என்று கூறி அவருக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.