தில்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு விளையாட்டரங்கில் 18 வயது தடகள வீரர் ஒருவர் மின் விசிறியில் தூக்கிட்டு புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகரைச் சேர்ந்த பலிந்தர் செளதரி, 100 மற்றும் 200 மீட்டருக்கான தடகள போட்டிகளில் பங்கேற்று வந்துள்ளார். கடந்த 2016 நவம்பர் முதல் ஜவாஹர்லால் நேரு விளையாட்டரங்க விடுதியில் தங்கி பயிற்சி பெற்று வந்த செளதரி, இந்தியாவுக்காக சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார்.
சம்பவம் தொடர்பாக இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) இயக்குநர் நீலம் கபூர் கூறியதாவது:
முதல்கட்ட தகவலின்படி, செளதரி புதன்கிழமை காலை தனது தந்தையுடன் பண விவகாரம் தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், மாலை அவரது சகோதரி அவரைக் காண்பதற்கு வந்துள்ளார். அப்போது தற்கொலை செய்துகொள்வதாக சகோதரியை அச்சுறுத்திய செளதரி, அவர் முன்பாகவே தனது விடுதி அறையின் மின் விசிறியில் தூக்கிட்டுக் கொண்டுள்ளார்.
இதில் அதிர்ச்சியடைந்த அவரது சகோதரியின் சத்தம் கேட்டு, அங்கிருந்தவர்கள் செளதரியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செளதரி ஏற்கெனவே மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.
அவரது சடலத்தை அலிகருக்கு கொண்டு செல்வதற்கும், செளதரிக்கு இறுதிச் சடங்குகள் செய்வதற்கும் உரிய உதவிகள் செய்து வருகிறோம். செளதரியின் இந்த முடிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக துறை ரீதியிலான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். இந்திய விளையாட்டு ஆணைய செயலர் ஸ்வரன் சிங் தலைமையில் விசாரணை நடத்தி ஒரு வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று நீலம் கபூர் கூறினார்.