ஹைதராபாத்தில் சமீபத்தில் நடந்துமுடிந்த 2-வது டெஸ்ட் போட்டியின்போது மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தொடக்க வீரர் கிரான் பவல், அஸ்வின் பந்துவீச்சில் ரஹானேவிடம் ஸ்லிப் பகுதியில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கள நடுவர்களுக்கு கேட்ச் பிடித்ததில் சந்தேகம் இருந்ததால் டிவி நடுவரிடம் ஆலோசனை பெற்றார்கள். அவரும் இந்திய அணிக்குச் சாதமாகத் தீர்ப்பு வழங்கியதால் கேட்ச் சரியான முறையில் பிடிக்கப்பட்டு பவல் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த விக்கெட் வீழ்ந்ததின் பின்னால் நடைபெற்ற சம்பவம் தற்போது வெளிவந்துள்ளது. பவல் ஆட்டமிழந்த பிறகு, மே.இ. அணியின் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா, டிவி நடுவரின் அறைக்குச் சென்று தவறாகப் பேசியுள்ளார். அதுமட்டுமன்றி, நான்காவது நடுவரின் அறை உள்ள பகுதிக்குச் சென்று வீரர்களுக்கு மத்தியில் நான்காவது நடுவர் குறித்து மோசமாகப் பேசியுள்ளார். இதையடுத்து கள நடுவர்கள் புரூஸ் ஆக்ஸன்ஃபோர்டு மற்றும் இயன் குட், மூன்றாம் நடுவர் நைஜல் லாங், நான்காவது நடுவர் நிதின் மேனன் ஆகியோர் ஐசிசி விதிமுறைகளை ஸ்டூவர்ட் லா மீறியதாகக் குற்றம் சுமத்தினார்கள். இதனால் மே.இ. அணி அடுத்து விளையாடவுள்ள இரு ஒருநாள் ஆட்டங்களில் பயிற்சியாளராகச் செயலபட லா-வுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று அபராதப் புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளது. நூறு சதவிகித ஆட்ட ஊதியம் அபாராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்தியாவுக்கு எதிரான அக்டோபர் 21, 24 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள ஒருநாள் ஆட்டங்களில் ஸ்டூவர்ட் லா பயிற்சியாளராகச் செயல்பட மாட்டார்.