மதுரை: தேனியில் ராட்சத கிணறு மூலம் நீர் எடுக்கும் விவகாரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலக்ஷ்மிக்கு மதுரை உயர்நீதின்றக் கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த ஊரான தேனி அருகே உள்ள லட்சுமிபுரத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் இரண்டு ராட்சத கிணறுகளை வெட்டியுள்ளார். இதன் மூலம் அதிக அளவில் தண்ணீர் உறிஞ்சப்படுவதால், நிலத்தடி நீர் பாதிப்பு உண்டாகிறது என்று கூறி ஊர் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் லட்சுமிபுரத்தினைச் சேர்ந்ந்த ரங்கசாமி என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு ஒன்றினைத் தொடர்ந்தார். அதில் அவர், 'ஓ.பி.எஸ் தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து எடுக்கப்படும் நீரானது, மோட்டார் மூலம் அருகில் உள்ள கிராமங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இது மின்வாரிய விதிகளுக்கு விரோதமானது.
எனவே இதனைத் தடுத்து நிறுத்தும் விதமாக மோட்டாருக்கான மின் இணைப்பினை துண்டிக்க மின்வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதற்கு அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீரைக் கொண்டு செல்வதற்கான அனுமதி தலைமைப் பொறியாளரிடம் பெறப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலக்ஷ்மிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட மதுரை உயர்நீதின்றக் கிளை, வழக்கினை ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது.