காவிரி புஷ்கர் கும்பமேளாவிற்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தக் கோரிய வழக்கு: திருச்சி ஆட்சியர் நேரில் ஆஜராக உத்தரவு

காவிரி புஷ்கர் கும்பமேளா விழாவிற்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து பதிலளிக்கத் தவறிய திருச்சி ஆட்சியரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

காவிரி புஷ்கர் கும்பமேளா விழாவிற்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து பதிலளிக்கத் தவறிய திருச்சி ஆட்சியரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் அடுத்த மாதம் (செப்.) 12-ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை காவிரி மகா புஷ்கர் கும்பமேளா திருவிழா நடைபெற உள்ளது. இதில் 30 லட்சத்திற்கும் மேலானோர் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இங்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை. காவிரியில் பக்தர்கள் நீராடும் அம்மா மண்டபத்தில் பாதுகாப்பு வசதிகள் இல்லை. எனவே ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் காவிரி மகா புஷ்கர் கும்பமேளா விழாவிற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என்று சர்வதேச வைஷ்ணவ ராமானுஜ சாமராஜ சபைச் செயலர் கோவிந்த ராமானுஜ தாசர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, காவிரி மகா புஷ்கர் கும்பமேளாவிற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து பதிலளிக்க திருச்சி ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டபடி மகா புஷ்கர் கும்பமேளாவிற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து பதிலளிக்காததால், திருச்சி ஆட்சியர் செவ்வாய்க்கிழமை (ஆக.22) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com