தமிழக அரசின் இணையதளத்தில் இருந்து அமைச்சர்களின் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி நீக்கப்பட்டது குறித்து தமிழக முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
மதுரை வேளாண் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய வாழைத் திருவிழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வில் (நீட்) இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க பிரதமரிடம் கோரிக்கை வைத்து தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம். மேலும், அனைத்து வகுப்புகளின் பாடத் திட்டங்களை மாற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து வகுப்புகளின் பாடத் திட்டங்கள் முழுமையாக மாற்றப்படும்.
தமிழக அரசின் இணையதளத்தில் இருந்து அமைச்சர்களின் தொடர்பு எண், மின்னஞ்சல் முகவரி நீக்கப்பட்டது குறித்து எனக்குத் தெரியாது. அதுகுறித்து தமிழக முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என்றார்.