சென்னை: தேனி மேற்குத் தொடர்ச்சி மலையின் பொட்டிபுரத்தில் அமையவுள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ள சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்து தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் பொட்டிபுரம் என்னும் இடத்தில் மலையைக் குடைந்து நியூட்ரினோ திட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால் இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த திட்டத்தினை எதிர்த்து 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பினைச் சேர்ந்த சுந்தர்ராஜன் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டலப்பிரிவில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். இது தொடர்பாக விளக்கம் அளிக்க தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இந்நிலையில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் நியூட்ரினோ திட்டம் குறித்து ஆய்வு செய்ய ஏழு பேர் அடங்கிய புதிய குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ள தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வழக்கு மார்ச் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ள சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்து தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இது தொடர்பான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவும் தடை விதித்து தீர்ப்பாயம் உதரவு பிறப்பித்துள்ளது.