சென்னை: தமிழக அரசின் டாஸ்மாக் விற்பனைக் கூடங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் விலையை ஐந்து சதவீதம் வரை உயர்த்துவதற்கான மசோதாவை பேரவையில் அமைச்சர் வீரமணி தாக்கல் செய்தார்
தமிழக சட்டசபையில் தமிழக வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் வீரமணி இன்று மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தமிழக அரசின் மாநில விற்பனை ஆணையம் (டாஸ்மாக்) மூலம் டாஸ்மாக் விற்பனைக் கூடங்களில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் விலையை ஐந்து சதவீத வரை உயர்த்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசின் வருவாயை பெருக்குவதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் வீரமணி தெரிவித்தார்.
விரைவில் நாடுமுழுவதும் ஜி.எஸ்.டி மசோதா அமல் செய்யபட உள்ள நிலையில் மாநில அரசுக்கு கணிசமான வருவாய் இழப்பு ஏற்பட உள்ளது. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையிலும் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படாத நிலையில் வருவாயை அதிகரிக்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.