ஆலயத்தின் சொத்துக்களை விற்பதாகக் கூறி, ரூ.6.88 கோடி வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக மதபோதகரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
விஜிபி ஹவுஸிங் பைனான்ஸ் என்ற தனியார் நிறுவனம் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில் இயங்கி வருகிறது. திருச்சி பொன்னகரில் உள்ள ஏஜி சர்ச் என்ற ஆலயத்தின் தலைமை மதபோதகரும், தேவநேசன் நார்மன் மகனுமான நார்மன் பாஸ்கர் (69) என்பவர் ஆலயத்தின் சொத்துக்களை விற்க உள்ளதாக, கடந்த 2011-ஆம் ஆண்டு விஜிபி நிறுவனத்தை அணுகியுள்ளார்.
தொடர்ந்து சுமார் ரூ.7 கோடி மதிப்பிலான சொத்துக்களை விற்பதாக பேச்சுவார்த்தை நடத்திய அவர், ரூ.6.88 கோடி ரொக்கத்தைப் பெற்று கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் கூறியபடி, கடந்த சில ஆண்டுகளாக சொத்துக்களை கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். மேலும், கொடுத்த பணத்தையும் திருப்பித் தரவில்லையாம்.
இதுகுறித்து விஜிபி நிறுவன திருச்சி கிளையின் துணைத் தலைவர் தங்கையா, 2016 ஆகஸ்ட் 15-ஆம் தேதி அப்போதைய திருச்சி மாநகர காவல் ஆணையர் சஞ்சய் மாத்தூரிடம் புகாரளித்தார்.
புகாரின் பேரில் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் இந்த வழக்குத் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு, மதபோதகர் நார்மன் பாஸ்கர் விண்ணப்பித்திருந்தார். இந்த மனு நிராகரிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸார், மதபோதகர் நார்மன் பாஸ்கரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.