சென்னை: தமிழகத்துக்கு வந்திருக்கும் பிரதமர் மோடிக்கு எதிரான 'கோ பேக் மோடி' என்ற ஹேஷ்டாக் உலக அளவில் டிவிட்டரில் முதலிடம் பிடித்துள்ளது.
தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர், திரையுலகினர், பல்வேறு அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என பல தரப்பிலும் இன்று கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
ஒட்டுமொத்த தமிழகமும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போராடி வருகிறது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் கடத்தி வரும் மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டம் வலுத்து வருகிறது.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் தமிழக வருகையைக் கண்டித்து டிவிட்டர் போன்ற சமூக தளங்களிலும் ஏராளமானோர் கருத்துகளை பதிவு செய்துள்ளனர். அந்த வகையில், இந்திய அளவில் மட்டும் அல்லாமல், கோ பேக் மோடி என்ற ஹேஷ்டாக் இன்று உலக அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியப் பிரதமர் மோடிக்கு எதிரான இந்த ஹேஷ்டாக், இன்று உலக அளவில் முதலிடம் பிடித்திருப்பது, தமிழக மக்களின் போராட்டம் உலக நாடுகளை கவனிக்க வைத்திருப்பதையே காட்டுகிறது.